சுமையா புத்தகம் குறித்து எழுத்தாளர் திரு.சங்கர ராம பாரதி





சுமையா 

சிறுகதை அனுபவமும் , பயணக்கட்டுரை போன்ற அனுபவமும் ஒரு சேர்த்து கிடைத்த அனுபவமாக மிளிர்கிறது அன்பு அண்ணனின் சுமையா என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு . 

கூழாங்கற்கள் விமர்சனம் முதன்முதலில் நான்தான் எழுதினேன் என்ற ஞாபகம் எனக்கு . ஆனால் சுமையா கொஞ்சம் நாளாகிவிட்டது . வாசித்து முடிக்க 3 மணிநேரம் மட்டுமே . ஆனால் எழுத கொஞ்சம் நாட்களாகிவிட்டது . நிச்சயமாக புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது இந்த சுமையா . புது புது கோணங்களில் ,களங்களில் கதை சொல்லியாக தனது பணியினை சிறப்பாக செய்திருக்கிறார் அன்பு அண்ணன் கனவுப் பிரியன்....

சுமையா என்ற பெயரே என்னவாக இருக்கும் என்றளவில் சிறுகதை தொகுப்பின் தலைப்பே உள்ளே அழைத்துச்செல்கிறது . அடுத்தடுத்த கதைகளும் கருக்களும் ஆச்சரியப்படுத்துகின்றன . 

உலகம் சுற்றியவர் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் இருக்கும் பல்வேறு இடங்களும் கதையின் களங்களாக வந்துநிற்கிறது . ஏற்கனவே அனபுத் தம்பி கார்த்திக் புகழேந்தி க்கு கூறியது போல நிறைய வாசிப்பாளராகவும் திகழ்கிறார் என்பது அவர் கதையின் ஊடாக சொல்லும் செய்திகளின் மூலமாக அறிய முடிகிறது .
நம்பி கோவில் பாறைகள் மற்றும் ஜெனியின் டைரிக் குறிப்புகள் கதை படித்து முடித்துவிட்டு இரவு தூங்கும்போது அத்தனை சீக்கிரமாக உறங்கிவிட இயலாது . பயம்காட்டிவிடுகிறார் . 

அதே நேரத்தில் சில கதைகளில் எளிய மனிதர்களின் வாழ்வியலை மண்சார்ந்த பிரச்சினைகளை சொல்லும்போது எத்தகைய புரிதலோடு இந்த சமூகத்தை அணுகி வருகிறார் என்பதும் தெளிவாகிறது . 

நிச்சயமாக எனக்கு அண்ணன் ஒரு இசுலாமியர் என்பது கூழாங்கற்கள் வாசிப்பதற்கு முன்பு தெரியாது . அன்பு ஐயா N.Rathna Vel வழியாகவே அவருடைய உண்மைப் பெயர் அறிவேன் . இந்த நூலில் உள்ள கதைகள் சிலவற்றில் இசுலாம் பற்றிய செய்திகள் வருகின்றன. ஆனால் மதம் தாண்டிய மிகச்சிறந்த மனிதநேயமிக்கவர் என்பதை தன்னுடைய எழுத்திலும் தான் சந்தித்த மனிதர்கள் வழியாகவும் விளக்குகிறார்

சமகால பிரச்சினைகள் பலவற்றையும் இயற்கை , மருத்துவ கழிவுகள், கடலோர வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அதன் சுவாரசியம் குறையாமலும் மிகைப்படுத்தல் இல்லாத வகையிலும் பதிவு செய்துள்ளார் .

மொத்தம் 21 கதைகள் ...கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களம் . ஆனால் ஒவ்வொரு கதையிலும் வரும் மனிதர்கள் நம்முடனும் நிச்சயமாக பயணித்துக் கொண்டிருப்பவர்கள் . இனி அவர்களை நாம் காணும்போது நம்மை அறியாமல் சில விநாடிகள் இந்த கதைகளை மனம் அசைபோடும் . 

கதை சொல்லியாக இருப்பது அத்தனை எளிதல்ல. அது பலருக்கும் வாய்ப்பதில்லை, அது அண்ணனுக்கு மிக அருமையாக வாய்த்துள்ளது . அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு தனது பணிகளுக்கு இடையே இத்தனை ரசனையான எழுத்துக்களால் நம்மை ஈர்ப்பது என்பது ஒருவகை வரம்தான் ..

வாழ்த்துக்கள்  

Comments

Popular posts from this blog

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

கூழாங்கற்கள் - நினைவுகள்

சுமையா சிறுகதைத்தொகுப்பு பற்றிய Sakthi RS அவர்களின் வாசிப்பனுபவம்