கூழாங்கற்கள் பற்றி நண்பர் மந்திர மூர்த்தி

கனவுப்பிரியனின் கூழாங்கற்கள் சிறுகதைத்தொகுப்புப் படித்தேன். தினசரி ஓரிரு கதைகளாக அசைபோட்டுப் படித்தேன். 

இதில் சில கதைகளை ஏற்கனவே அவருடைய முகநூலில் வாசித்து இருக்கிறேன். அவரது ஆரம்பப் பதிவுகளில் தனது தந்தையைப் பற்றி, தகப்பன் சாமிகளைப் பற்றி எழுதியதை வாசித்த பிறகு எனது மனதிற்கு அப்போதே மிகவும் நெருக்கமானவர் ஆனார்.

கரிசல் கி.ராஜநாராயணன் சில ஆண்டுகளுக்கு முன் இனி வருங்காலங்களில் தமிழில் நூல் வழிக்கதைகள் அழிந்து போகும்; உலகம் போகும் வேகத்தில் யாரும் இனி அவற்றை படிக்க மாட்டார்கள்என்று கூறியதாக ஞாபகம். Intranet-ன் வளர்ச்சியினால் ஏற்பட்ட முகநூல்/ Blog, தமிழில் மிகவும் பிரபலமாகி இன்று தமிழ் நூல் வாசிப்பவர்களின் தினசரி வாழ்க்கையில் ஓர் அங்கமாகிவிட்டது. முகநூலானது தமிழில் நிறையப்பேர் கதைகள், கவிதைகள், சிந்தனைகளை எழுதுவதற்குக் களம் அமைத்துத் தந்தது. நிறையப்பேர்களை கதைகளை வாசிக்க வைக்கிறது; இனி வருங்காலங்களில் கதைகள் எல்லாம் அழிந்து போகாமல் முகநூல்/ Blog ஆகியவவை காப்பாற்றும் என நாம் ஓரளவு நம்பலாம். அந்த வகையில் முகநூலில் நிறையக் கதைகள் எழுதி நண்பர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் நண்பர் கனவுப்பிரியன். நகைச் சுவையுடன் எதனையும் சொல்லும் எளிய நடை, ஈர்க்கும் சொற்பிரயோகம் என ஆரம்பத்திலேயே முகநூலில் கதைகள் எழுதுவதில் 'பளிச்சென' நல்ல எழுத்தாளராக, உண்மையான மனிதராக என்னுடைய கண்ணில் பட்டவர் நண்பர் கனவுப்பிரியன்.. 

அவரது சிறுகதைகள் சில மரபுக்கவிதைகள் போலவும், சில புதுக்கவிதைகள் போலவும் கருவமைப்புக் கொண்டுள்ளன. ஓரிரு சிறுகதைகளின் கடைசிப் பாரா சற்றுப் பிரச்சார நெடியுடன் அமைந்துள்ளது சிறிய குறை என விமர்சகர்கள் கூறக்கூடும் . ஆனால் கதைகளில் வீர்யமும், வேகமும், உணர்ச்சியும் குறையாமல் இருப்பதுதான் முக்கியம். அந்த வகையில் படைப்பாளி முழுமையாக வெற்றியடைந்துள்ளர். 

இனி ஒவ்வொரு கதையாகப் பார்த்து விடலாம்.

இந்தமடம் இல்லைன்னா சந்தமடம்கதை சமுதாயத்தில் நடுத்தர, மேல்தட்டு மக்களின் மனப்பான்மையைப் பட்டவர்த்தனமாகச் சொல்லுகிறது. யாரோ ஒருவன் மக்களுக்கு வந்து பொதுப் பணி, ஆராய்ச்சி, எடுபிடி வேலை எல்லாம் செய்யவேண்டும்; நானும் பாராட்டுவேன். ஆனால் அது என் பிள்ளையாக இருக்கக்கூடாதுஎன்பதை அழகாகக் கூறுகிறது.

கூழாங்கற்கள்சிறுகதை வாழ்க்கையின் பொருளாதாரத் தேவைக்காக வெளிநாட்டுக்குப் பிழைக்கச் செல்லும் மனிதனின் எண்ண ஓட்டங்களாக நல்ல எழுத்து நடையுடன் வெளிப்படுகிறது.

களிமண் வீடுஓர் அற்புதமான சிறுகதை. எவ்வளவோ செய்திகளை அன்பை மட்டுமே மூலதனமாக்கிக் கூறியுள்ளார் கதாசிரியர். அனைவரும் படிக்க வேண்டிய சிறுகதை இது. கதையை முடித்தபின் தகப்பன்சாமி கண்ணில் குளமாய் நிறைகிறார். 

குண்டு பாகிஸ்தானிகதை எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் prejudice இல்லாமல் நோக்க வேண்டும் என்பதை அழகாகச் சொல்லுகிறது. அருகில் கோட்சூட் அணிந்து டிப் டாப்பாக ஒரு மலையாளிஎன்ற வரியும், குறிப்பாக மலையாளிஎன்ற சுட்டும் இங்கு தேவையா? என்ற கேள்வியும் மனதில் எழுகிறது.

வடிவுஒரு நல்ல சிறுகதை. மனிதர்கள் என்பவர்களே இதைப் போல நிறைய முரண்பாடுகளை உடையவர்களே. புரிதல் நிறையப் பிரச்சனைகளை நீக்கக் கூடும். இல்லாதது தானே பிரச்சனை.

மேட் இன் சைனாநல்ல சூப்பர் கதை. உண்மையில் இது இரு சிறுகதைகளின் இணைப்பு என்று கூடச் சொல்லலாம். விஞ்ஞானச் செய்திகளை நன்றாக அனைவரும் புரியும் வண்ணம் தேவையான அளவில் விளக்கி கதாசிரியர் அருமையாகத் தந்துள்ளார். நகைச்சுவையும் இக்கதையில் நன்றாகவே தெறிக்கிறது.

நெற்றித் தழும்புசிறுகதை தகப்பன்சாமிக்குச் செய்யும் ஒரு நினைவு அஞ்சலியாகக் கொள்ளலாம்.

காட்சிப்பிழைகதை அரசியல் பித்தலாட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கையைப்பற்றி உரக்கவே பேசுகிறது. சவுதி, ரியாத் இடங்களின் வாழ்க்கை முறை பற்றிய செய்திகளையும் அழகாகத் தருகிறது.

உப்புக்காற்றுஇன்னொரு நல்ல கதை. பலவேசமுத்துவின் இரண்டு பெண்டாட்டிக் கதை பற்றிப் பேசுகிறார். கனவுப்பிரியன் அவருடைய எல்லாக் கதைகளிலும் பிரபஞ்சன், ஜெயந்தனைப் போல மனிதர்களின் மேன்மையைப் பற்றி, அவர்கள் குறை, நிறைகளைப் பற்றி அழகாகப் பேசுகிறார். 

கடல் தாண்டிய உறவுநல்ல கதை. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இது போல ஏதாவது ஒரு கதை இருக்கும். அதனை ஸ்ரீலங்காப் பின்னணியுடன் அழகாக எழுதி உள்ளார் கதாசிரியர்.

பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா?’ ஒரு நல்ல விறுவிறுப்பான சிறுகதை. இந்தச் சிறுகதையில் கடைசிப்பாரா தவிர்க்கப்பட்டு இருக்கலாமோ?

நாடு துறந்தவன் கதைஒரு நல்ல கதை. காசு,பணம் இருந்தாலும் (இல்லாவிட்டாலும்) வாழ்க்கையைப்பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு Approach இருக்கும். தந்தை, மகனாய் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் அந்தப் புரிதல் இல்லாததால்தான் வாழ்க்கையில் இவ்வளவு குழப்பங்கள் என்பதை நன்றாக எழுதியுள்ளார்.

இனி ஒரு விதி செய்வோம்என்ற கதை மருத்துவத்துறையில் இந்தியா தன்னுடைய வற்றாத சித்த மருத்துவத்தை அறிவியலுடன் இணைத்து ISO/JCI சான்றிதழுடன் உலகுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற கனவுப்பிரியனின் கனவைப் பற்றிக் கூறுகிறது.

மனிதரில் இத்தனை நிறங்களா?’ இன்னொரு சிறந்த கதை. லண்டன் ஊர், ஏர்போர்ட், பஸ் பற்றிய செய்திகளைத் தருகிறார். லிசி என்ற பெண் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், ஜலால் பற்றியும், லண்டனிலிருந்து திரும்பியவுடன் சலீமைப் பற்றிய நம்மூரில் மக்களின் நினைப்புப் பற்றியும் எல்லா ரசங்களையும் சேர்ந்து தருகிறார் கதாசிரியர்.

பனங்கொட்டைச் சாமியார்முதியோர் விடுதியில் பிள்ளைகளின் ஆதரவின்றி உள்ள பெற்றோரைப் பற்றிப் பேசுகிறது. வறுமைமட்டுமல்ல; தனிமையான முதுமையும் கொடுமைதான்என்கிறார் கதாசிரியர். குமாரசாமி அந்த வயதான முதியவர்கள் அனைவருக்குமாக வாழ்க்கையை எப்படி இனிமையாக மாற்றுகிறார் என்பதே கதை. 

ஓ..ரசிக்கும் சீமானேஇன்றைய இளைஞர்களுக்கான சுவாரஸ்யமான கதை. சீமான் ரசிக்கவே இல்லையே... என்னத்தைச் சொல்ல.. போங்க.....!

அவரு அனில்கும்ப்ளே மாதிரிஓர் அட்டகாசமான நகைச்சுவைக் கதை. பின்னாளில் பல இடங்களிலும் நகைச்சுவைக்கு இந்தக்கதை எடுத்துக் காட்டாகக் கையாளப்படும் என நம்பலாம். படிப்பவர்கள் மனம் விட்டுச் சிரிப்பது நிச்சயம். அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய நகைச்சுவை சிறுகதை.

ரபீக்@ஜிமெயில்.காம் இன்னொரு அருமையான சிறுகதை. மனிதர்களின் மாண்பைப் பேசும் நல்ல கதை. சலீமா பாத்திரத்தின் பேச்சு மூலமாகவே கதாசிரியர் பாதிக்கதையை எடுத்துச் செல்வது சிறப்பு. நண்பர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் ஏன் பேசிக்கொள்ளவில்லை என்பதற்கு கதை முடிவில் ஓர் அழகான suspense-ம் வைத்துள்ளார்.

ஜைனப் அல் பாக்கர் என்ற கதை இன்றைய இளைஞர்களுக்கான கதை. அரேபியாவில் உள்ள மக்கள் வாழ்க்கை முறை, பெண்கள் கல்லூரியின் உள்ளே நடக்கிற பெண்களின் நடைமுறை ராஜ்ஜியம் ஆகியன பற்றி சுவாரஸ்யமாகக் கூறுகிறார் கதாசிரியர். 

ஜுவானா என்றொரு பிலிப்பைனி பெண்இன்னொரு சுவாரஸ்யமான கதை. ஆனால் அடிநாதம் ஒரு பெண்ணுடைய சோகம் பற்றியது.இன்றைய இளைஞர்களின் பார்வையில் சொல்லப்படும் கதை.

அக்கா நீங்க அழகா இருக்கீங்க!இன்றைய உலகை எதிர்கொள்ள வேண்டி பெண்களுக்குத் தேவையான தைரியம் வேண்டும் என்பதைப் பெண்கள் மூலமாகவே தரும் ஒரு நல்ல கதை.

ஆக மொத்தம் 21 முத்தான சிறுகதைகள். சிறுகதை இலக்கணத்திற்கு எல்லாக் கதைகளும் உட்பட்டு வரவேண்டும் என்ற அவசியமில்லை. கதாசிரியன் சொல்ல வேண்டிய செய்திகளை உணர்வுப்பூர்வமாக, சுவாரஸ்யமாக, அழகாகக் கதையின் வாயிலாக மக்களைச் சென்றடையச் செய்கிறாரா என்பதே முக்கியம்.

அந்த முறையில் முதல் சிறுகதைத் தொகுதியிலேயே நண்பர் கனவுப்பிரியன் நீங்கள் செஞ்சுரி அடித்து விட்டீர்கள். அனில்கும்ப்ளே மாதிரிஅல்ல.அனில் கும்ப்ளேஆகவே வெளிப்பட்டுள்ளீர்கள்.... 

தகப்பன் சாமிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்து விட்டீர்கள்...

இன்னும் உங்கள் படைப்புகள் மக்களுக்காகத் தொடரட்டும்.....மனமார்ந்த வாழ்த்துகள்.


மந்திர மூர்த்தி 
Executive at BSNL India 

Comments

Popular posts from this blog

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

கூழாங்கற்கள் - நினைவுகள்

சுமையா சிறுகதைத்தொகுப்பு பற்றிய Sakthi RS அவர்களின் வாசிப்பனுபவம்