கூழாங்கற்கள் பற்றி தோழர் கல்பனா ரத்தன்

கூழாங்கற்கள் மீது இயல்பாகவே எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு.மலையின் முலைகள். மண்ணின் மச்சங்கள்.நிலத்தின் விதைகள் அவைகள்.கழச்சிக் கல் விளையாட சிறு வயதில் எங்கு போனாலும், ஆற்றில் பொறுக்கிக் கொண்டு வருவோம்.ஒவ்வொன்றும் தனித்த ஒரு முகமாகவே, காலத்தின் தழும்புடன் இருக்கும்.
இந்தத் தொகுப்பில் மொத்தம் 21 கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளோடு தனித் தன்மை பெற்று இருக்கின்றன.
முதல் கதையிலேயே மறைந்து கொண்டிருக்கும் நாட்டு வைத்தியம், வர்மம் பற்றி அழகாக சொல்லி இருக்கிறார். நதிக்குள் அமிழ்ந்த கூழாங்கற்களாய் மனதுக்குள் ஆழப் பதிந்து விட்டது கூழாங்கற்கள் சிறுகதை.அயல் தேசத்தில் வாழ்க்கையையும், மனதை மண்ணிலும் வைத்ததை வெளிப் படுத்துகிறது களிமண் வீடு சிறுகதை.
குண்டு பாகிஸ்தானி அருமையான கதை. நாம் ஒருவர் மீது, ஒரு நாட்டினர் மீது வைத்த பிம்பங்களை உடைக்கிறது.வடிவு சிறுகதை கண்கலங்க வைக்கிறது.மேட் இன் சீனாவில் அவரது தொழில் சார்ந்த விபரங்களை படிப்பவர்களுக்கு எளிதாக விவரித்திருக்கிறார்.
பால்யத்தை அசை போடும் நெற்றித் தழும்பு உப்புக் காற்றின் வாசத்தோடு மணக்கிறது. பிழைப்புக்காக அயல் தேசம் சென்றவர்களின் உணர்வுகளின் ஒரு துளியை சாட்சிப் பிழை பதிவு செய்கிறது.
கருப்பட்டி மிட்டாய், கொழுந்தியா .... உப்புக் காற்று ஆஹா..கடல் தாண்டிய உறவில் மிக நுட்பமாய் மெல்லிய காதலை பரவச் செய்கிறார்.பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா, இனி ஒரு விதி செய்வோம்ஓ ரசிக்கும் சீமானே போன்ற கதைகள் சுஜாதாவின் கதைகளை வாசித்த அனுபவத்தைக் கொடுக்கின்றன. இது மாதிரி கதைகளை இன்னும் எதிர் பார்க்கிறோம் சார்.முதுமை என்பது கொடுமை அல்ல, அதுவும் ஒரு வரம் தான் என அறிய வைத்த பனங்கொட்டை சாமியார் சிறுகதை மனதிற்கு விருப்பமான கதை ஆகி விட்டது.
அவரு அனில்கும்ளே மாதிரி கதை இரு நாடுகளிடையே உள்ள வேறுபாடுகளையும் ஒரு விளையாட்டால் நீக்க முடியும். அந்நாடுகளும், விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் அந்த நிலை வர முடியாமல் வைத்திருக்கும் வேதனையை நகைச்சுவை கலந்த உணர்வோடு விவரித்த இந்தக் கதையும் பிடித்தமான ஒன்றாகி விட்டது.ரபிக் @ ஜிமெயில் .காம் கதைக்குள் கதைகள் விரியும், காட்சிகளை கண்முன் நிறுத்தும் சிறந்த கதை. தொகுப்பின் ஆகச் சிறந்த கதைகளுள் ஒன்று.ஜுவானா என்றொரு பிலிப்பைனி பெண்.....கடைசியாக வந்தாலும் மனதில் முதலிடம் பிடித்து விட்டது. பிலிப்பைனி என்றில்லை, எந்த நாட்டுப் பெண்களுக்கும் பொருந்தும் ஒரு கதைக் கருவை, உளச் சிக்கலை அற்புதமாக பதிவிட்டு இருக்கிறீர்கள்.
வாழ்வின் நிர்ப்பந்தத்தில் அயல் நாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்களின் வலிகள், வேதனைகள், சோகங்கள் அதையும் தாண்டி அவர்கள் அதனை எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் எல்லாம் சிறந்த முறையில் கூறியுள்ளார். அவர் தொழில் சார்ந்த நிறைய விஷயங்களை அழகாக எளிமையாக விவரித்துள்ளார். எந்த வித வார்த்தை அலங்காரங்களும் இன்றி, படிப்பவர் மனதை அடையும் வகையில் கதைசொல்லி ஒவ்வொரு கதையையும் பதிந்திருக்கிறார்.எல்லாவற்றிற்கும் மேலே அவரது நகைச்சுவை உணர்வு அடி நாதமாக இருக்கிறது
இன்னும், இன்னும் உங்களிடம் இருந்து மற்றுமொரு தொகுப்பை எதிர் பார்க்கிறோம் கனவுப் பிரியன்.மனித நேயம், மத நல்லிணக்கம், நம் மண்ணின் பெருமை, அந்நிய நாட்டில் வாழும் போது கிடைக்கும், சலிப்புகள், சலனங்கள், சகிப்புத் தன்மை, அன்பு, காதல் என எல்லா ரசங்களையும் அள்ளித் தந்து இருக்கிறார். தூத்துக்குடி உப்புக் காற்றில் ஆரம்பித்த பிராயத்து அனுபவங்களில் இருந்து அரபு நாடுகளின் மணல் தேசம் வரையான தனது அனுபவங்களின் வாசத்தை ஒவ்வொரு பக்கத்திலும் மணக்க விட்டுள்ளார்.கையில் எடுத்ததும் முழுவதும் படித்து முடிக்கும் தொகுப்பாக சுவையாக, சுவாரஸ்யமாக இருக்கிறது தங்கள் முதல் தொகுப்பு.அடுத்த தொகுப்புக்கான எதிர் பார்ப்பும் இப்போதே வேரூன்றி விட்டது. மேலும், மேலும் எழுதுங்கள்.
வாழ்த்துகள் கனவுப் பிரியன்.


கல்பனா ரத்தன் 
ஆசிரியர் 

Comments

Popular posts from this blog

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

கூழாங்கற்கள் - நினைவுகள்

சுமையா சிறுகதைத்தொகுப்பு பற்றிய Sakthi RS அவர்களின் வாசிப்பனுபவம்